சனி, 30 அக்டோபர், 2010


து 
ஒரு முன் மழைக் காலம்…
மேகம் கொஞ்சம் கண் திறந்த நேரம்

என் முன் நீயும், 
உன் முன் நானும்
தனி தனி குடைகளின் கீழ் நின்றுகொண்டிருந்தோம் 



வல்லிய காற்று மெல்லிய
உன் கைகளில் இருந்த குடையைப் பறித்து
என்னிடம் அனுப்பியது,


ஒரு மின்னலைப் போல,

நீ அருகில் வந்தாய்

உன் 
குடையை மடக்குகையில் கவனித்தேன்
உன் 

மடக்கும் விழிகளை…

சட்டென்று 
ஒரு குட்டு 
என் இதயத்தில் விழுந்தது.


எங்கோ மறைந்திருந்த  
நம் காதல் வித்தின்மீது
முதல் மழைத் துளி விழுந்தது

என், 
உன் விழியிரண்டும் போட்ட
பார்வைப் பந்தலில் நம் காதல் படரத்தொடங்கியது

பின் வந்த அடைமழைக் காலம்…


பேருந்து 
நம் காதலுந்தானது

பேசத் தயங்கி 
மெளனம் பேசிய காலம்

தூரத்தில் இருந்தும் 
பார்வையால் நெருங்கிய நேரம்

நாம் மழையில் 
நனைந்தும் நனையவில்லை
குடைக்குள் இருந்தும் 

நனையாமல் இல்லை


மெளனம் உடைத்து காதல்
மொழியில் உருமாறிய தருணம்

நீ பேசிய முதல் வார்த்தைதான்
உன்னத காதலுக்கு உலை வைத்தது



அதன்பின் 
நாம் நம்
காதலைத் தவிர்த்து எல்லாம் பேசினோம் 

என்னைப் பற்றி, 
உன்னைப் பற்றி, நம்மைப் பற்றி…
காதல் அங்கே கழன்றுக்கொண்டது

நாம் ஒன்றாக இருந்தோம் 
காதலை தொலைத்து
எதிர்பார்ப்புகளை நிறைத்து



அது 
ஒரு இலையுதிர்க் காலம்…


மரங்களை 
இயற்கை மொட்டையடித்த பருவம்
நாமும் போட்டிருந்த சட்டைகளை உரிக்கத் தொடங்கினோம் 

இபோதுதான் தான் புரிகிறது

நம் 
மெளனம் தந்த அர்த்தத்தை

நாம் 
பேசிய எந்த வார்த்தையும் தரவில்லை

நம் 
பார்வைகள் தடுத்த  நெருக்கத்தை

நம் 
அருகாமை ஏதும் கெடுத்துவிடவில்லை
காதலுக்கு எதுவும் காரணம் தேவைப்படவில்லை

அதில் இருந்து விலகுவதாக நினைக்க மட்டும்
காரணம் தேவைப்பட்டது நமக்கு



காதலில்லாமல், 
காதலித்துவிட்டோமோ
என்பதற்காக வாழாமல் பிரிந்ததுதான்
நாம் 

காதலுக்குச் செய்த 
ஒரே மரியாதை!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக